நிகழ்வுகள்
தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திலுள்ள பிள்ளையார் மலையில் புதிதாக விநாயகர் சிலை திறப்பு
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலய பிள்ளையார் மலையில், வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் அருள் ஆசியுடன், வீரமுனையை சேர்ந்த இங்கிலாந்து லிவர்பூல் பொதிகை நிறுவனத்தினரால் சுமார் 21 அடி உயரமுள்ள விநாயகர் திருவுருவச்சிலை திறந்து வைக்கபட்டது. தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற தினமான 11.07.2015 அன்று சிற்பாச்சாரி திரு.ஸ்ரீகரன் தலைமையில் வடிமைக்கப்பட்ட இத் திருவுருவச்சிலையானது பொதுமக்களின் அருளாசிக்காக கண் திறந்து வைக்கப்பட்டது. |
வீரமுனையிலிருந்து கதிர்காம கொடியேற்றத்தை காண செல்லும் பாதயாத்திரிகர்கள்
வீரமுனையிலிருந்து கதிர்காம முருகனின் கொடியேற்றத்தை காண ஒரு தொகை பக்த அடியார்கள் இன்று (06/07/2015) வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து உகந்தை முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர். இவர்கள் உகந்தை முருகன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு கதிர்காமத்தை நோக்கி தங்கள் பாதயாத்திரையை ஆரம்பிக்க உள்ளனர். கதிர்காம தலத்தின் உற்சவங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. |
ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்
செந்நெல் வயல் நிலங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் வீரமுனை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம் 28/06/2015 அன்று ஞாயிற்றுக்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் இடம்பெற்றதுடன் பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலமூர்த்திக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடியார்களுக்கான அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது. |
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பூங்காவனத் திருவிழாவும் வைரவர் மடையும்
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 11ஆம் நாளாகிய நேற்று (24/06/2015) வியாழக்கிழமை பூங்காவனத் திருவிழா, வைரவர் மடை என்பன சிறப்பாக இடம்பெற்றதுடன் உற்சவ நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தது. |
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவமும் கொடியிறக்கமும்
வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய நேற்று (24/06/2015) புதன்கிழமை தீர்தோற்சவம் இடம்பெற்றது. விசேட கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசையினைத் தொடர்ந்து மஞ்சள் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்று யானையிலே அங்குசம் எடுத்துச்செல்லப்பட்டு தீர்தோற்சவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் மாலை 6.00 மணிக்கு திரு ஊஞ்சல் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து கொடியிறக்கம், சண்டேஸ்வரர் பூசை மற்றும் ஆச்சாரியார் உற்சவம் என்பன இடம்பெற்றன. மேலும் படங்களுக்கு கீழே அழுத்தவும் |
அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஒன்பதாம் நாளான செவ்வாய் கிழமை (23.06.2015) பாற்குட பவனி, சித்திரத் தேரோட்டம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றதுடன் கலை நிகழ்சியில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இதன் போதான சில காட்சிகள். |
சோழ இளவரசி சீர்பாததேவி அமைத்த ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா
கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் பண்டைத் தமிழர்களின் வரலாற்றை உலகெங்கும் பறைசாற்றிய பிரசித்திமான விநாயகர் ஆலயங்களில் ஒன்றாகும். கண்டியை தலைநகரமாக கொண்டு ஆட்சிசெய்த இராஜசிங்கனின் மகன் வாலசிங்க மன்னன் சோழநாட்டு இளவரசி சீர்பாததேவியை மணமுடித்து திரும்புகையில் திருகோணமலையின் கோனேஸ்வரத்திற்கு முன்பாக கப்பலை நகரவிடாமல் தடுத்து நின்ற விநாயகர் சிலையை கப்பலில் எடுத்து வைத்து இக்கப்பல் எங்கு கரை தட்டுகின்றதோ அங்கு ஆலயம் அமைப்பேன் என சீர்பாததேவி வேண்டியதற்கு அமைய கப்பல் மட்டக்களப்பு வாவியினூடாக ஓடி கரை தட்டியபோது அமைக்கப்பட்ட ஆலயமே அம்பாறை வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் ஆகும். கடலில் யாத்திரை மேற்கொண்டதன் காரணமாக கடலுக்கு சிந்து எனும் பெயரும் வழங்கபடுவதானால் சிந்து யாத்திரைப் பிள்ளையார் என்று பெயர் பெற்று காலப்போக்கில் சிந்தாயாத்திரை பிள்ளையார் என பெயர் மருவி வழங்கலாயிற்று. இந்த ஆலயத்தின் தோற்றம் பற்றிய வரலாற்றுக்கதை சோழர் காலத்துடனும் சோழர் இராச்சியத்துடனும் தொடர்புடையது. சோழர் காலத்தில் கண்டிய மன்னன் வாலசிங்கனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் பதினான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்ததென்று சான்றுகள் கூறுகின்றன. சீர்பாததேவியின் வழிவந்த சீர்பாத குலத்தினர் இன்றும் தமது பாரம்பரிய பண்பாட்டு முறைகளுடன் நிலைபெற்று வாழ்ந்து வருவதை இன்றைய தேர்த்திருவிழாவில் நடந்த சீர்பாத குலத்தினரின் பவனிக் காட்சியினூடே காணமுடிந்தது. கடந்த 15ஆம் திகதி இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் தொடங்கிய நிலையில் ஒன்பதாவது நாளாகிய நேற்று செவ்வாய்க்கிழமை (23/06/2015) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாட்குடபவனி இடம்பெற்றது. வீரமுனை ஆண்டியர் சந்தியில் அமைந்துள்ள முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடம் எடுத்து வரப்பட்டு சீர்பாததேவி கண்டெடுத்த ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. முன்னே மேள தாளங்கள் முழங்க இரு யானையின் மீது பூசகர் பாற்குடம் எடுத்துவர அதன் பின்னே பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளுடன் பெண்கள் பாற்குடம் எடுத்து வந்து எம்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. மாலை 5.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூமழை சொரிய ஊர்வலகமாக கொண்டுவரப்பட்டு தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். கிழக்கிலங்கையின் வரலாற்றில் யானைகள் பவனியுடன் தேர்த்திருவிழா நடைபெறும் ஆலயமாக வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் திகழ்கின்றது. அத்துடன் கிழக்கிலங்கையின் தேரோடும் ஆலயம் என்ற புகழையும் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் பெற்றுள்ளது. பெரும் துயரங்களையும் நெருக்கடிகளையும் கடந்து தம்மை எல்லா வளங்களுடன் வாழவைக்கும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பெருமானை மக்கள் திருத்தேர் பவனியில் சுமந்த காட்சி பக்தியின் உன்னதமாக விளங்கியது. |
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் வேட்டைத் திருவிழாவும் சப்பரத் திருவிழாவும்
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாளான திங்கட்கிழமை (22.06.2015) வழமைபோன்று தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றது. மாலை 4.00 மணிக்கு வேட்டைத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு லண்டனைச் சேர்ந்த வே.கோபி அவர்களால் புதிதாக நிர்மானிக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட சப்பரத்திற்கு பதிலாக பயன்படுத்தப்படும் சகடையின் வெள்ளோட்டம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து எம்பெருமான் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சகடையில் அமர்ந்து கிராம வீதிகளில் வலம்வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார். மேலும் படங்களுக்கு கீழே அழுத்தவும் |
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் சுமங்கலி பூசையும் தெற்பத் திருவிழாவும்
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஏளாம் நாளான நேற்று (21.06.2015) வழமைபோன்று தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றதுடன் மதிய பூசையினைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை சுமங்கலி பூசை மற்றும் தெற்பத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. |
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் மாம்பழத் திருவிழாவும் ஆறாம் நாள் நிகழ்வுகளும்
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று (20.06.2015) வழமைபோன்று தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றதுடன் மதிய பூசையினைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. ![]() |
1-10 of 499